Tuesday, November 15, 2005

சோனி வழி, குறுக்கு வழி.

ரசிகர்கள் தாங்கள் வாங்கும் இசைத்தட்டுக்களை வீட்டில் பிரதியெடுப்பதை தடுக்க, சோனி நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த 'First4Internet' என்ற நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போக அது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
இசைத்தட்டுக்களை வாங்குவோர் வீட்டில் பிரதியெடுத்து நண்பர்களுக்கு கொடுப்பது 'Casual Piracy' என்று இசைத்தட்டு நிறுவனங்களால் அழைக்கப்படுகிறது. இணைய தள தரவிறக்கங்கள், P2P வலைப்பின்னல்கள் என்று பலவற்றில் இருந்து இசைத்திருட்டை பெரும்பாலும் ஒழித்துவிட்டு, தற்போது இசைத்தட்டு நிறுவனங்கள் தம் பார்வையை இந்த 'Casual Piracy' மீது திருப்பியிருக்கின்றன.

DRM எனப்படும் டிஜிட்டல் உரிமை மேலாண்மை தொழில்ழுட்பத்திற்கு இப்போது ஏக கிராக்கி. பலரும் பல விதமான நுட்பங்களை பரிசோதித்துக் கொண்டிருக்கின்றனர். தாம் விற்கும் இசைத்தட்டிலேயே DRM நுட்பத்தை நிறுவலாம் என்ற புத்திசாலித்தனமான எண்ணம் சோனிக்குத் தோன்றியது. தங்கள் DRM மென்பொருளை பயனரின் கணிணியில் நிறுவவேண்டும், ஆனால் அது பயனருக்குத் தெரியக்கூடாது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது மேற்கூறிய 'First4Internet' நிறுவனத்தின் நுட்பம். இந்த இசைத்தட்டுக்களை கணிணியில் பாட வைக்கும்போது கணிணி பயனரிடம் எந்த அனுமதியும் பெறாமல் தன் மென்பொருளை நிறுவியது சோனி, இது முதல் தவறு. அப்படி நிறுவப்பட்ட மென்பொருள் 'Adware/Spyware/Malware' என்று பல வேர்களைக் கொண்டிருக்கும் குண்டாந்தடி நிறுவன்ங்களின் மென்பொருளைப் போல பயனர் அறியாவண்ணம் ஒளிக்கப்பட்டது. கணிணி ஹாக்கர்களின் இந்த வழிமுறையை கையாண்டு தன் மென்பொருளை நிறுவியது இரண்டாவது இமாலய குற்றம். அப்படி நிறுவிய மென்பொருளை கணிணியிலிருந்து அகற்ற எந்த வழியையும் கொடுக்காதது மூன்றாவது குற்றம். சிஸ் இன்டெர்னல்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் ரஸ்ஸிகோவிக் என்பவரெ இதை முதலில் கண்டுபிடித்தார். தன் கணிணியில் ஒரு 'ரூட்கிட்' (Rootkit, இதை இப்படித்தான் அழைக்கின்றனர்) இருப்பதைக் கண்டு திகைப்படைந்து, பின்னர் இது சோனி இசைதட்டுக்களால் வந்தது என்பதை அறிந்தார். இந்த ரூட்கிட்டுகளை கணிணியிலிருந்து அகற்றுவது மிகக் கடினம். இதை முன்னரே கண்டறிந்த 'F-Trust' என்ற நிறுவனம் சோனியை எச்சரித்தும் சோனி செவிசாய்க்கவில்லை. இது பெரும் பிரச்னையாகி பலத்த எதிர்ப்புக்கு பின்னர், சோனி மெதுவாக, இந்த மென்பொருளை அகற்ற படு சிக்கலானதொரு வழிமுறையை தெரிவித்தது. இது நான்காவது மாபெரும் குற்றம். இதற்குள்ளாக இந்த சோனி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வைரஸ் எழுதுபவர்கள் புதிய வைரசையே உருவாக்கிவிட்டனர்.

இந்த ரூட்கிட் நுட்பம் உங்கள் கணிணியில் உள்ள கொப்புக்களை மறைக்க பயன்படும், சோனி தன் மென்பொருளை இது போன்ற நுட்பத்தை கொண்டே மறைத்தது. ஆனால், பிரச்னை என்னவென்றால் இந்த நுட்பம் நிறுவப்பட்டுள்ள கணினியில் சோனி மென்பொருள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் எதைப் போட்டாலும் அதுவும் மறைக்கப்பட்டுவிடும்; அங்கே வைரஸைப் போட்டாலும். இவ்வளவுக்குப் பின்பும், இந்த நிமிடம் வரை சோனியிடமிருந்து எந்த மன்னிப்புக் கோரலும் வரவில்லை. மாறாக, நாங்கள் இதை இசைக்கலைஞர்களின் உரிமையை காப்பாற்றவே செய்தோம் என்று மார்தட்டுகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறர்களாம். சோனியின் இந்த செய்கை பலருக்கும் கடும் எரிச்சலை எற்படுத்தியுள்ளது. இந்த 'ரூட்கிட்' கொண்ட இசைத்தட்டுகளை சோனி திரும்பப் பெறவேண்டும், பாதிக்கப்பட்ட கணிணியிலிருந்து இதை நீக்க எளிமையான வழிமுறையை தர வேண்டும், இந்த செய்கைக்கு மன்னிப்புக் கோர வேண்டும், அதுவரை சோனியின் பொருட்களை புறக்கணிப்போம் என்று கோஷங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

பல ஆன்ட்டி-வைரஸ் நிறுவனங்களும், மைக்ரோசாப்டும் சோனியின் இந்த மென்பொருளை 'மால்வேர்' என்று அறிவித்து, தங்கள் மென்பொருட்கள் அதை நீக்கும் என்று அறிவித்துவிட்டன. ஐ-ட்யூன்ஸின் பெருவெற்றியால் கலங்கிப் போய் 'எத்தை தின்றால் பித்தம் தெளியும்' என்று அலைந்து கொண்டிருக்கும் இசைத்தட்டு நிறுவனங்கள் காசு கொடுத்து இசைத்தட்டு வாங்குவோரை இது போல் திருடர்களைப் போல் நடத்துவது சரியான கொடுமை. ஒரிஜினல் இசைத்தட்டு வாங்கினால் வைரஸ் தாக்கும் அபாயம் உண்டென்றால் அதற்கு திருடிவிட்டே போகலாம் என்று எண்ண வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

Tuesday, October 18, 2005

செய்தித்தாளுக்கு வயது 400!

செய்தித்தாளுக்கு வயது 400!

1605ம் வருடத்திலேயெ உலகின் முதல் செய்தித்தாள் அச்சிடப்பட்டுவிட்டது. முதலில் அச்சிட்டது யார் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆப்ரகாம் வெர்ஹூவன் என்பவர் 1605-ல் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஆன்ட்வெர்ப் நகரில் தொடங்கிய 'நியூ டெய்டிங்கென்' (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாளே உலகின் முதல் செய்தி ஏடு என்று கருதப்படுகிறது. டச்சு மொழியில் வெளியிடப்பட்ட இந்த ஏட்டின் பிரதிகள் நமக்கு 1621 ஆண்டு முதல்தான் கிடைத்துள்ளன. அதற்கு முன்னர் வந்த பதிப்புகள் கிடைக்கவில்லை.

யோஹான் கரோலஸ் என்பவரும் 1605ம் ஆண்டில் ஒரு செய்தியேட்டை வெளியிடத் தொடங்கினார். அதன் பெயர் "Relation aller fürnemmen und gedenckwürdigen Historien". ஜெர்மன் மொழியில் அமைந்த இந்த ஏடு அன்றைய ரோமப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த 'ஸ்ட்ராஸ்பர்க்' நகரில் இருந்து வெளிவந்தது (ஸ்ட்ராஸ்பர்க் நகர் தற்போது ஃபிரான்சில் இருக்கிறது). இதை அவர் 1605ம் அண்டில் அச்சிடவில்லை; கையால் எழுதி விற்று வந்தார், 1609ல் தான் அச்சிடத் தொடங்கினார் என்றும் கூறுகிறார்கள். 1609ம் ஆண்டில் ஹெய்ன்ரிக் ஜூலியஸ் என்பவரும் 'Avisa Relation oder Zeitung' என்ற ஜெர்மன் மொழி செய்தி ஏட்டை தொடங்கியதாக நம்பப்படுகிறது.

400 ஆண்டுகளாக பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் தாண்டி, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பல ஊடகங்களின் வளர்ச்சியையும் மீறி செய்தி ஏடுகள் இன்று அடைந்திருக்கும் இடம் சாமான்யமானதில்லை. செய்தியை நுகர ஆயிரம் வழிகள் இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் அச்சிடப்படும் செய்தித் தாள்களின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருப்பது இன்னும் ஆச்சரியம்.

செய்தித்தாள் வாங்குவதில் முதல் 5 இடங்களில் உள்ள புள்ளிகளும் விவரங்களும்:

1. சீனா - 9.35 கோடி
2. இந்தியா - 7.88 கோடி
3. ஜப்பான் - 7.05 கோடி
4. அமெரிக்கா - 4.83 கோடி
5. ஜெர்மனி - 2.21 கோடி


நம்ம 'டமிள் முரசு' வந்தப்புறம் இந்தியாவோட செய்தியேடு விற்பனை இன்னும் 1 கோடி கூடியிருக்காது? ;-)

Tuesday, August 30, 2005

ஓபரா இன்று இலவசம்! :)

ஓபரா இணைய உலாவி தன் 10வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தன் மென்பொருளுக்கு இலவச பதிவு எண் வழங்குகிறது.

மிக விரைவாக பக்கங்களை காண்பிக்கும் உலாவி, Tabbed உலாவலை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, பக்கங்களை படித்துக் காட்டும் வசதி கொண்டது (ஆங்கிலம் மட்டும்), சுட்டி சைகைகளை (Mouse Gestures) முதலில் அறிமுகப்படுத்தியது என்று பல பெருமைகளைக் கொண்டது இந்த உலாவி.

ஓபரா பற்றி மேலும் அறிய இந்தப் பதிவின் வலது பக்க பலகையில் உள்ள 'ஓபரா 8' என்ற படத்தின் மீது சுட்டுங்கள்.

இலவச பதிவு எண்ணை பெற இங்கே சுட்டுங்கள்

Friday, July 29, 2005

கூடன்பெர்க் திட்டு

செவ்வியல் இலக்கியங்களையும் இன்னபிற இலக்கியங்களையும் ஒரிடத்தில் சேர்த்து வைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நல்ல முயற்சி இந்த கூடன்பெர்க் திட்டு. பல்வேறு மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட இலவச மின்புத்தகங்களை இந்த கூடன்பெர்க் திட்டில் சேர்த்து வைத்திருக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்கள் பலரும் தங்கள் நேரத்தை செலவிட்டு புத்தகங்களை உள்ளிடுகிறார்கள். காப்புரிமை பிரச்னை இல்லாத புத்தகங்கள் மட்டுமே இடப்படுகின்றன. இலவசமாக தரவிறக்கிக் கொள்ளக் கூடிய இந்த புத்தகங்கள், இணையம் இல்லாதவர்களின் வசதிக்காக CD அல்லது DVD-யிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. CD/DVD-யை நீங்கள் கோரினால், யாரோ ஒரு தன்னார்வலர் உங்களுக்கு அவருடைய செலவில் இரண்டு பிரதி அனுப்பி வைப்பார்; ஒன்று உங்களுக்கு, இன்னொன்று நீங்கள் யாருக்காவது பகிர.

கூடன்பெர்க் திட்டின் இணைய தளம் அத்திட்டில் உள்ள எல்லா புத்தகங்களின் பட்டியலை வைத்துள்ளது. நூலாசிரியர் அல்லது நூலின் பெயரை வைத்து புத்தகங்களை தேடவும் செய்யலாம். புத்தகங்களின் உள்ளடக்கத்தில் தேட யாஹூவும் கூகிளும் உதவுகின்றன. புத்தகங்கள் TXT, PDF, PS(PostScript), PDB (Palm DB), Tex என்று பல வடிவங்களில் இருக்கின்றன. சில புத்தகங்கள் ஒலி புத்தகங்களாகவும் (Audio Books) கிடைக்கின்றன.

புதிய புத்தகங்களின் சேர்க்கையை அறிந்து கொள்ள ஒவ்வொரு இரவும் இற்றைப்படுத்தப்படும் RSS ஓடையும் உண்டு.

மு.கு: இந்திய மொழிகளில் சமஸ்க்ருதம்(?!) தவிர வேறெந்த மொழியிலும் நூல்கள் இல்லை. சமஸ்க்ருதத்திலும் ஒரே ஒரு நூல்தான் இருக்கிறது (இல்லை, இல்லை கருடபுராணம் இல்லை, அது விஷ்ணு சஹஸ்ரநாமம்)

இந்த நற்பணியை சத்தமில்லாமல் செய்து வரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! (தமிழ்ல நன்றி சொல்லி யாருக்கு தெரியப் போகுது, இருந்தாலும் நம்ம திருப்திக்காக..)

---
மு.கு என்றால் முக்கிய குறிப்பு என அறிவீராக :-)

Friday, July 01, 2005

கெட்டது குடி - மைக்ரோசாப்ட் க்ளாரியாவை வாங்குகிறதாம்!

உளவு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான க்ளாரியாவை மைக்ரோசாப்ட் வாங்கப்போகிறதாம். இந்த க்ளாரியா 'கேட்டர்' என்ற பெயரில் உளவு மென்பொருள்களை தயாரித்து உங்கள் கணிணியில் திருட்டுத்தனமாக நிறுவிக் கொண்டிருந்தது. பல கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த இந்நிறுவனம் தனது பெயரை 'க்ளாரியா' என்று மாற்றிக் கொண்டு தனது சேவையை மட்டும் மாற்றாமல் தொடர்ந்து வந்தது. இப்பொழுதும் 'காசா' வை நிறுவும்போது கூடவே ஒட்டிக் கொண்டு க்ளாரியாவும் வந்து விடும். இப்படிப்பட்ட ஒரு ஒட்டுண்ணியை மென்பொருள் பெரியண்ணன் மைக்ரோசாப்ட் வாங்கப் போகிறது என்ற செய்தி வயிற்றில் புளிய மரத்தையே கரைக்கிறது.


இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் 'வலை மேயும் அனுபவத்தை பயனருக்கு இன்னும் சிறப்பாக்கப் போகிறோம்'. எப்படி? ;-) எப்படி சிறப்பாக்குவார்கள் தெரியுமா? உங்களின் வலை மேயும் பழக்கத்தை ஆராய்ந்து அதற்கேற்ற விளம்பரங்களை உங்களுக்கு காட்டுவார்கள். ஏற்கெனெவே IE-யிலும் MS Office-லும் 'ஸ்மர்ட் டக்ச்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி பலத்த எதிர்ப்பால் IE-யில் இருந்து மட்டும் பின்னர் தூக்கினார்கள். இந்த ஸ்மார்ட் டாக் செய்யும் திருவேலை என்னவென்று பார்ப்போம். என்னுடைய தளத்தில் நான் தமிழ்மணத்திற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன். மைக்ரோசாப்டிற்கு 'சமஸ்க்ருதவாசனை' தளத்துக்காரர்கள் வலை விளம்பரம் செய்ய காசு கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், என் தளத்தை IE-ல் மேயும்போது தமிழ்மணம் இணைப்பை சுட்டினால் அது 'சமஸ்க்ருதவாசனை' தளத்திற்கு கொண்டு போய் சேர்க்கும். இப்படியான 'அற்புதமான' பயனர் அனுபவம் உங்களுக்கு கிட்டும். நல்லவேளையாக பலத்த எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது.

இப்பொழுது க்ளாரியாவை வாங்கி என்ன விதமான திருவிளையாடல்களை நிகழ்த்த பெரியண்ணன் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மைக்ரோசாப்டின் அடுத்த இயங்குதளமான 'நீளக்கொம்பில்' (அதான் லாங்ஹார்ன் சாரே!) க்ளாரியாவின் நிரலும் சேர்த்தே நிறுவப்படலாம் அல்லது அவ்வளவு நாள் பொறுக்க முடியாவிட்டால் 'Windows Security Update' என்ற பெயரில் எளிதாக உங்கள் தற்போதைய இயங்குதளத்திலேயெ கூட நிறுவி விடலாம். எப்படி வசதியோ? ;-)

பி.கு:

என் பதிவை 77 சதவிகிதத்தினர் IE-ல தான் மேய்வதாக StatCounter காட்டுகிறது. அப்பப்பொ பயர்பாக்ஸ், ஓபரா போன்றவற்றிலும் மேயுங்கள், எதற்கும் பின்னர் கைகொடுக்கக் கூடும்.

லினக்ஸ் போன்ற இயங்குதளங்களையும் கவனிப்பது கூடுதல் நலம். 100 சதவிகிதம் (நான் உட்பட) ஏதோவொரு மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில்தான் மேய்கிறோம் என்கிறது என் பதிவுப் புள்ளிவிவரம். :(

Thursday, June 30, 2005

மாபெரும் புத்தக தரவுத்தளம் - கூகிள் பிரிண்ட்

கூகிள் மீண்டும் ஒரு சேவையை சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகிள் பிரிண்ட் எனும் இந்த சேவை ஒரு மாபெரும் புத்தக தரவுத்தளம். இதில் வித்தியாசம் என்னவென்றல் நீங்கள் இந்த புத்தகங்களின் பக்கங்களையும் படிக்கலாம். பக்கங்கள் ஒளியுணரப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 'Tamil' என்று நீங்கள் கூகிள் பிரிண்டில் தேடினால் 29,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவை அனைத்தும் தமிழ் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள். பல புத்தகங்களின் பக்கங்கள் முழுமையாகவும், சிலவற்றில் சில பக்கங்கள் மட்டுமும், சிலவற்றில் அறிமுகப்பகுதி, உள்ளடக்கம் மட்டும் கிடைக்கின்றன.

எல்லா புத்தகங்களுக்கும் யார் பதிப்பாளர், வலையில் எங்கே கிடைக்கும் போன்ற தகவல்களும் கொடுக்கப்படுகிறது.

வெங்கட் தமிழ் புத்தக தரவுத் தளம் அமைக்கும் திட்டம் பற்றி பதிவிட்டிருந்தார். அந்த தரவுத்தளம் அமைக்கப்படும் வரையில் இந்த கூகிள் தரவுத்தளத்திற்கு நாம் தரவுகளை வழங்கலாமே?

கூகிளின் தரவுகள், பதிப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்படுவதாகத் தெரிகிறது. பதிப்பாளர் பத்ரி, பதிப்பாளர்களொடு தொடர்புடைய ஹரன் பிரசன்னா போன்றோர் கூகிளை இது குறித்து தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.

இதற்கிடையில் நம்முடைய தரவுத்தள முயற்சியும் தொடரப்பட வேண்டும். ஒரு தரவுத்தளம் எந்த தனி நபர் சாராததாகவும், இன்னொன்று கூகிள் போன்ற மாபெரும் வலை நிறுவனத்தின் வீச்சை பயன்படுத்துவதாகவும் இருப்பது நல்லதுதானே..

Wednesday, June 29, 2005

இட ஒதுக்கீடு தேவையா? - அல்வா சிட்டி ஷம்மிக்கு பதில்.

கிராமம், நகரம் என்று வந்தால் எல்லோரும் கிராமத்திலே ஒரு ரேஷன் கார்ட் வைத்துக் கொண்டு அதில் நுழைய முயற்சிப்பர். இது போல அதிகம் முன்வைக்கப்ப்டும் மற்றொரு முறை 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு'. இதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. வருமானத்தை குறைத்து ஒரு சான்றிதழ் வாங்கினால் போதும், உள்ளே நுழைந்து விடலாம்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சம நிலைக்காக உருவாக்கப்பட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து விடலாம், ஏழை
பனக்காரனாகிவிடலாம், ஆனால் தாழ்த்தப்பட்டவர் ஆதிக்கம் செலுத்த முடியுமா? அவர்களுக்கும் சம உரிமை வேண்டும், சமமான போட்டிக்களம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இட ஒதுக்கீடு (கொள்கை அளவில்).

சில ஓட்டைகள் இருந்தாலும் இப்போதுள்ள முறை சிறந்த முறையே. இதில் களைய வேண்டிய குறைகள் நிறைய உள்ளன.
1. இந்த முறையிலேயெ கிராமப்புறம், நகரம் என்று உள்-ஒதுக்கீடு இருக்க வேண்டும்.
2. BC சான்றிதழ் வாங்கிக் கொண்டு இந்த ஒதுக்கீட்டின் பலனை திருட்டுத் தனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரை இதிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
3. ஒட்டு மொத்த ஒதுக்கீட்டு முறைக்கும் ஒரு 'Exit criteria' வைக்க வேண்டும். இந்த இலக்கை எட்டிவிட்டால் இனி இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும். இதை அறிவிக்காத வரை இட ஒதுக்கீட்டின் பெரும் பயன் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கே போய் சேரும்.

அல்வா சிட்டி ஷம்மியின் இந்த பதிவிற்கான பதில் இது.

சின்னஞ்சிறு பூமி - கூகிள் எர்த்

கூகிளின் மற்றொரு புதிய சேவை 'Google Earth'. இந்த சின்னஞ்சிறு உலகை ஒரு முப்பரிமாண (3D) வரைபடமாக காட்டுகிறது. உலகின் எந்த மூலையை வேண்டுமானாலும் அங்குள்ள கட்டிடங்கள் முதற்கொண்டு காட்டுகிறது. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு நாமே பறப்பது போன்ற ஒரு தோற்றம் தருகிறது. பல்லாவரத்திலிருந்து பாஸ்டன் பயண நேரம் பத்து வினாடிக்கும் குறைவு தான்.

கூகிள் எர்த் சேவையை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அகலப் பாட்டை வலையும் நல்ல முப்பரிமாண Graphics Processor-ம் அவசியம். மேல் விவரங்களுக்கு -> http://earth.google.com

கீழே தெரிவது நம்ம சென்னை (அம்)மாநகரம்தான்.

சென்னை (அம்)மாநகரம்

Wednesday, June 15, 2005

ழ.

மதிய உணவு நேரத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது மழை வந்தது. 'டேய் என்னடா திடீர்னு மளை வருது' என்றான் ஒருவன். இன்னொருவனும் 'ஆமாம் இப்போ போய் மளை வருதே..' என்று ஆச்சரியப்பட்டான். நான், 'அது மளை இல்லடா, மழை' என்றேன். 'இவனுக்கு இதே வேலைதான், நாங்க சரியாத்தான் சொல்லுறோம்' என்று என்னை திட்டி விட்டு அவர்கள் மீண்டும் 'மளை'யைப் பற்றி பேச ஆர்மபித்து விட்டார்கள். எனக்கோ சரியான எரிச்சல்.

'டேய், தமிழ்ல எத்தனை 'la'?' என்றேன். "மூணு" என்றனர் இருவரும் ஒரே நேரத்தில். நான் அதிர்ந்து போய் விட்டென், நமக்குத் தெரியாமல் தமிழில் இன்னொரு 'ல' இருக்கிறதாவென. அது என்ன என்றபோது, 'ல, ள, ள' என்றனர். மேலும் கடுப்பான நான், 'எழுதி காட்டுங்கடா' என்றேன். ல, ள, ழ என்று எழுதி காட்டி 'தோ, இது தான் மூணாவது 'ல' என்று 'ழ'வைக் காட்டினர். 'உங்களுக்கு இப்பிடித்தான் பள்ளிக்கூடத்துல சொல்லிக் கொடுத்தாங்களா' என்றால் 'ஆமாம், இப்படித்தான் சொல்லிக் கொடுத்தாங்க' என்று ஆணித்தரமாக கூறினர். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள்தான் என்றில்லை பழைய தஞ்சை, தென்னாற்காடு, வடாற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரும்பாலானோருக்கு 'ழ' வருவதில்லை. தமிழ் 'தமிள்' தான், மழை 'மளை' தான். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இத்தனை நாளும் இவர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன், இப்போதுதான் தெரிகிறது இவர்கள் தாம் உச்சரிப்பது சரி என்று நினைத்துதான் உச்சரிக்கிறார்கள் என்று.
இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் 'ழ'வை சரியாக உச்சரிக்க முடிந்தும் அதை 'ள' என்று உச்சரிப்பதை 'ஃபேஷனாக' சிலர் நினைக்கின்றனர்.

நான் மேலே சொன்ன வகையினர் 'ழ' வரவே வராத வகை. ஆனால், நான் நேற்று ஈழத்து கொக்குவில்லைச் சேர்ந்த நண்பர் ஒருவரோடு கதைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழை 'தமிழ்' என்று சரியாக உச்சரிக்கிறார், ஆனால் 'வாழைப்பழம்' அவருக்கும் 'வாளைப்பளம்' தான். நீங்கள் சரியாக உச்சரிக்கவில்லை என்று அவருக்கு விளக்க மிகவும் சிரமப்பட்டேன். நான் சொல்வது சரிதானோ என்று அவர் இப்போதுதான் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார், இன்னும் ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் 'ல' மற்றும் 'ள' வை மிகத் தெளிவாக வேறுபடுத்தி உச்சரிப்பவர் அவர்.


எங்கே பிரச்னை? நான் தான் தவறாக உச்சரித்துக் கொண்டிருக்கிறேனோ...

Tuesday, June 07, 2005

கிராமப்புற மாணவர்களுக்கு நீண்டகால நலன்..?

கிராமப்புற மானவர்களுக்கு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டிலேயே உள் ஒதுக்கீட்டு முறை சில காலத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டது, அது இப்போது இருக்கிறதாவென்று தெரியவில்லை. நுழைவுத் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டலும் இந்த ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்போதும், கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை, வேண்டுமானால் பொள்ளாச்சி, ராசிபுரம் போன்ற சிறு நகர மாணவர்கள் இந்த ரத்தால் அதிகம் பயன் பெறக் கூடும்.

ஒருவேளை நமது பாடத்திட்டங்களும் தேர்வு முறைகளும் உருப்போடுவதை ஆதரிக்காமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாற்றப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது நகரங்களில் அதற்கென்று 'கோச்சிங் சென்டர்'கள் முளைக்கும், நகர மாணவர்கள் அதற்கு உடனடியாக தயார்படுத்தப்படுவார்கள், மீண்டும் கிராமப்புற மாணவர்கள் சரியான ஆசிரியர்களும் வசதியும் இல்லாமல் அவதிப்படுவார்கள். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சியும், ஊக்கமும், வசதியும், தேர்வு முடிவுகளுக்கு பொறுப்பேற்க வைக்கும் 'accountability'-யும் கொடுப்பதுதான் நீண்டகால அடிப்படையில் பயன் தரும், எந்த கொள்கை மாற்றமும் அவர்களை பாதிக்காதபடி காக்கும்.

அண்ணா பல்கலை, என்.ஐ.டி திருச்சி (முன்னாள் ஆர்.இ.சி) போன்றவற்றின் பிம்பங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. ஐ.ஐ.டி-க்களின் பிம்பங்களைப் பாருங்கள், அரசின் தலையீடு இல்லாததாலேயே அவை நீடித்திருக்கின்றான, உலகளவில் போற்றப்படுகின்றன. அவற்றிற்கு ஈடாக இல்லாவிட்டாலும் மாநில அளவிலும் இப்படிப்பட்ட பிம்ப உருவாக்கல் அவசியமே. நாளொரு கொள்கையும் பொழுதொரு முடிவுமாக எடுத்து அவற்றின் நம்பகத்தன்மையை குறைத்து விடக் கூடாது.

ஷங்கரின் பதிவில் பின்னூட்டமிடப்போய் சற்று நீண்டு விட்டதால் இந்த தனிப்பதிவு.

Monday, June 06, 2005

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகள் ரத்து - சரியா?

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகளும் மாணவர்களும் படும்பாடு சொல்லி மாளாது. முதலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருந்தது, பின்னர் நுழைவுத் தேர்வுகளை நுழைத்து அதில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் பள்ளி இறுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கணக்கிட்டார்கள். இது கொஞ்ச காலம் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தது. பின்னர் சில பலம் படைத்த கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை 'வாங்கி'னார்கள். இங்கே ஆரம்பித்தது சனி; இகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை வாங்கிய கையோடு உச்ச நீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விடுதலையும் வாங்கி ஆளுக்கொரு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை பெரும் பாடு படுத்தி கொண்டிருந்தார்கள். இப்போது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வையும் நிறுத்தி மீண்டும் சுழியிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள்.

கல்வி போன்ற மிக அடிப்படையான விஷயங்களில் கூட இன்னும் ஒரு நிரந்தரமான கொள்கை இல்லை நம் அரசுகளுக்கு. எல்லாமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' தான். ஒரு மணி நேரத்துக்கு 10 விடைத்தாள் என்ற லட்சிய நோக்கொடு விடைத்தாள் திருத்துபவர்கள் நம் ஆசிரியப் பெருமக்கள். இந்தத் தேர்வு முடிவுகளை மட்டுமே நம்பி மாணவர் சேர்க்கை என்பது, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை சூதாட்டமாக்குவதாகவே அமையும். 'இதுதான் கொள்கை, இனி இப்படித்தான் இருக்கும்' என்று எந்த முடிவுமே இருக்காதா... இப்படிப்பட்ட ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன் யாரை கலந்தாலோசித்தது அரசு? மாணவர்களையா, ஆசிரியர்களையா, கல்லூரி நிர்வாகிகளையா, பெற்றொர்-ஆசிரியர் கழகங்களையா..? இன்னும் எத்தனை காலத்துக்கு சேர் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத சிந்தனாவாதி இ.ஆ.ப அலுவலர்களே இப்படி முடிவெடுத்துக் கொண்டிருப்பர்?

Friday, April 01, 2005

லெமூரியா..?

லெமூரியா கண்டத்தைப் பற்றி பல நாட்களாகவே நானும் தகவல் தேடிக் கொண்டிருக்கிறேன். சிஃபியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஃபிப்ரவரி மாத மஞ்சரி இதழில் இரா. கு. பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய இந்த கட்டுரை கண்ணில் பட்டது. பல புதிய தகவல்களை இது தந்தாலும் சரியான, விரிவான ஆதாரங்கள் தரப்படவில்லை.

இது பற்றி மேலதிக விவரம் அறிந்தவர்கள் தயவு செய்து எனக்கு சுட்டவும்.

சின்ன வயதில் புத்தக வடிவில் படித்த மஞ்சரி, கலைமகள் எல்லாம் சிஃபியில் இப்போது இணைய வடிவில் கண்டு மகிழ்ச்சியடந்தேன். சென்னைக் கடைகளில் நான் பார்த்த வரை இவை கண்ணில் பட வில்லை.

Thursday, March 31, 2005

யாராகவும் ... நீங்கள்

நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு ப்ரச்னை குப்பை மின்னஞ்சல்கள். பல இடங்களில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை நாமெ கொடுத்து மாட்டிக் கொள்கிறோம். பெரும்பாலும,் இலவசமாக நாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு கொடுக்கும் விலை இது. மெய்லினேட்டர் (Mailinator) வழங்கி வரும் சேவை இதுபோன்ற தொல்லைகளைத தவிர்க்க உதவும். உன் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும் தளங்களுக்கு 'xyz@mailinator.com' என்று ஏதோ ஒரு முகவரியை கொடுக்கலாம். அந்த 'xyz' என்பதை 'bush', 'dog', 'down' என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். மெய்லினேட்டர் தளம், ...@mailinator.com் என்று வரும் எந்த ஒரு முகவரிக்கும் உடனடியாக ஒரு அஞ்சல் பெட்டியை உருவாக்கி வைத்து விடும்.
முகவரியைக் கேட்ட தளம் அதை சரி பார்க்கும்போது அந்த முகவரி இருக்கும், அந்த முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்களும் அந்த அஞ்சல் பெட்டியில் ஒரு 3 மணி நேரம் வரை இருக்கும். ஒரு வேளை செயலி லைசென்ஸ்கள் அந்த முகவரிக்கு அனுப்பப்பட்டால் நீங்கள் அங்கெ போய் படித்துக் கொள்ளலாம். இந்த சேவையை நான் சில காலமாக பயன்படுத்தி குப்பைகளைக் குறைத்திருக்கிறேன். ஒரு எச்சரிக்கை, இங்கு உருவாகும் அஞ்சல் பெட்டிகளுக்கு 'கடவுச் சொல்' இல்லாததால் நீங்கல் எந்த அஞ்சல் பெட்டியை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்னடா தொடர்பு என்று ஒரு வேளை நீங்கள் குழம்பினால், அது 'Be anyone' என்ற மெய்லினேட்டரின் தலைப்பு வாசகத்தின் மொழிபெயர்ப்பு முயற்சி. ஹி.. ஹி..

பி.கு:
மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் எழுத்துரு பிழை நீக்க கள்ள ஓட்டுப் போட விரும்பும் சகலமானவருக்கும்!

இந்த மெய்லினேட்டர் சேவையை பயன்படுத்தி நீங்கள் கணக்கற்ற கள்ள ஒட்டுக்களைப் போடலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

Wednesday, March 16, 2005

புது விசை

Thatstamil.com தளத்தில் இந்த புதிய பக்கத்தை பார்த்தேன்.



இது இணைய பதிப்பில் மட்டும் தான் வெளிவருகிறதா அல்லது அச்சு வடிவத்திலும் வருகிறதா என்று தெரியவில்லை. மற்றபடி, நல்லதொரு வாசிப்பனுபவம்!

Thursday, February 03, 2005

ஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)

ஜோயல் ஸ்போல்ஸ்கி என்பவர் மென்பொருள் பொறியியல் பற்றி பல நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருடைய இணைய தளம் Joelonsoftware.com.
இந்த கட்டுரைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை நீங்கள் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க விரும்பினாலும் அவரிடம் தெரிவிக்கலாம். நான் தமிழில் மொழி பெயர்க்க விருப்பம் தெரிவித்து சிலவற்றை மொழி பெயர்த்தேன், சிலவற்றைப் பிழை திருத்தம் செய்தேன். இதைச் செய்யும் போது தான் தமிழில் எவ்வளவு கலைச் சொற்கள் இன்னமும் தேவை என உணர்ந்தேன். ஆங்கிலத்தில் மிகச் சுலபமாக புதிய சொற்களை உருவாக்கி விடுகிறார்கள், அதற்கு சிறந்த உதாரணம் 'Googling'. ஆனால் தமிழில் அப்படி முடிவதில்லை.
இப்பொழுது அந்த தளத்தின் தமிழ் வடிவம் இயங்கி வருகிறது. நேரமின்மை மற்றும் வேலைப்பளுவால் என்னால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடமுடியவில்லை. நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் இப்பணியில் ஈடுபடலாம்.

Wednesday, February 02, 2005

அன்றைய கணினி, இன்றைய கணினி!

40களின் 'ENIAC' திட்ட கணினியைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.


ENIAC - 1940s


இது, 50களில் பிரபலமான எம்.ஐ.டியின் 'Whirlwind I' கணினியின் நினைவகப் பகுதி.


MIT's Whirlwind I - 1950s


இது தற்போதைய 'Mac Mini'. இரு உள்ளங்கைகளில் அடங்கி விடுகிறது பாருங்கள்!
Mac Mini



நன்றி! : சிநெட் ந்யூஸ்

21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!

காமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 முதல் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது இது. என் கைக்கு காமிக்ஸ் புத்தங்கள் சிக்கியது 1984ல் தான். அப்போது தொடங்கி இப்போது 2005 வரை 21 வருடங்களக எனக்கு ஆர்வம் குன்றாமல் இருக்கும் விஷயம் காமிக்ஸ் படிப்பது மட்டும்தான். ராணி காமிக்சில் தொடங்கி பின்னர் அது லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , திகில் காமிக்ஸ் , மினி லயன் என்று விரிவடைந்தது. ரானி காமிக்ஸ் தொடங்கிய புதிதில் அவர்கள் தரமான வெளிநாட்டு கதைகளையே வெளியிட்டார்கள். தரமான ஓவியங்கள், கலக்கலான மொழிபெயர்ப்பு என்று படிக்கவே குஷியாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல தரம் குறைய ஆரம்பித்தது, சுமாரான ஒவியங்கள், வசனங்களுடன் கதைகள் வர ஆரம்பித்து விட்டது. ராணி காமிக்சில் வந்த ஒரே 'சூப்பர் ஸ்டார்' ஜேம்ஸ் பாண்ட் மட்டும் தான். பின்னர் ராணி 'மாயாவி' கதைகளுக்கு மாறி, அந்த சரக்கும் தீர்ந்த பின்னர் சொந்தக் கதைகளை உருவாக்கத் தொடங்கியபோது நான் அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன்.

ஆனால் லயன் காமிக்ஸில் தொடர்ந்து நல்ல தரமான படைப்புகளையே வெளியிட்டு வருகிறர்கள். அமேரிக்க, ஐரோப்பிய கதைகளின் உரிமையை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமே இவர்களின் நகைச்சுவை கலந்த மொழிபெயர்ப்புதான். ஸ்பைடர் (ஸ்பைடர்மேன் அல்ல, இது வேறு ஸ்பைடர்), இரும்புக்கை மாயாவி, அ.கொ.தீ.க வை எதிர்த்துப் போராடும் சி.ஐ.டி லாரன்ஸ் & டேவிட், கௌபாய்களான டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் இணை, இரும்பு மனிதன் ஆர்ச்சி ரோபோ, லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் டைகர் என ஒரு பெரிய நாயகர்கள் பட்டியல் லயனில் உண்டு. இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸ்பைடரும், டெக்ஸ் வில்லரும் தான். ஸ்பைடரின் எகத்தாளம் நிறைந்த வசனங்கள் மிகவும் பாப்புலர். காமெடியில் கௌபாய் லக்கி லூக், சிக் பில் & கோ மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோர் பின்னியெடுப்பார்கள். சரியான வாசகர் ஆதரவு இல்லாதது, கதைப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களால் லயன், முத்து தவிர மற்ற காமிக்ஸ்கள் நின்றுவிட்டன.

சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன். அப்பொழுது வாங்காமல் விட்டதை எல்லாம் இப்போது பழைய புத்தகக் கடைக்காரர்களின் கூட்டணியோடு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறென். என்ன அப்போது 2 ரூபாய் தான் அசல் விலையே, இப்போது அதை 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இப்போது லயன் காமிக்ஸிலேயே பழைய கதைகளை 'க்ளாசிக்ஸ்' என் வெளியிட ஆரம்பித்துவிட்டதால் என் பாடு இன்னும் கொண்டாட்டம் தான்.


அப்போதிலிருந்து இப்போது வரை உள்ள ஒரு பிரச்னை இந்த லயன் காமிக்ஸ் வகையறாக்கள் சரியாகக் கடைகளில் கிடைக்காததுதான். அவர்களே தாமதமாக வெளியிடுவார்கள், அப்படியே வெளியிட்டாலும் கடைக்கு வந்து சேராது. போதிய வாசகர்கள் இல்லாததால் பல ஊர்களில் முகவர்களே கிடையாது. காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது எனத் தெரியாதவரை கண்ணில் படும் புத்தகக் கடையில் எல்லாம் 'இங்கே காமிக்ஸ் கிடைக்குமா?' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்?'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா?' என வினாவி அவர் 'இருக்கு சார்' என சொல்லிவிட்டால் நான் அடையும் பரவசத்திற்கு அளவிருக்காது. வாங்கும்போதே இவ்வளவு சந்தோஷமடைந்து விடுவதால், படிக்கும் போது அதை விட சந்தோஷம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. :) 7 வயதில் தொடங்கிய ஒரு விஷயம், அன்றைக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே அளவு அல்லது அதை விட சற்றுக் கூடுதலான சந்தோஷத்தையே இன்றைக்கும் கொடுக்கிறது...

Monday, January 31, 2005

தினமலரும் உண்மையும்

சென்னை மாநகராப் பேருந்தில் நின்று கொண்டு வெளியே 'பராக்கு' பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த ஒரே வாசகம், 'தினமலர் - உண்மையின் உரைகல்'. நல்லதொரு 'oxymoron' வாசகத்தை கண்ட மகிழ்ச்சி எனக்கு. 'தினமலர் - உண்மைக்கு உறை போட்டு அதன் மேலே மூடி வைக்கும் கல்' என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..

ஜெயகாந்தன் -> (ஜெயேந்திரதாசன்)?

புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதலில் படித்தது ஜெயகாந்தனின் 'ஹர ஹர சங்கர'. மிகவும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், மனிதர் ஏமாற்றிவிட்டார். இவர் எப்போது சங்கர மடத்திற்கு பக்க வாத்தியமானார்? அதில் வரும் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் தெரியாதாம், அவர் ஹிந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறாரம். பாவம் அவரை சுற்றி இருப்பவர்களின் சிறு தவறுகளுக்காக அவர் தண்டனை அனுபவிக்க நேருமாம். கடைசியில் சத்தியம் வெல்லுமாம். கஷ்டமடா சாமி! இதற்கிடையில் 'வன்னிய குல க்ஷத்ரியர்' என்ற ஜாதிப் பெயர் எப்படி உருவானது என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வேறு நிகழ்த்தி இருக்கிறார். ஜெயகாந்தன் ஒரு மாபெரும் எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் இந்த நாவலை அவரா எழுதினார் என்றே தோன்றுகிறது.

Tuesday, January 25, 2005

2 கோடி ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிகள்

ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி 1.0 பதிப்பு இரண்டு கோடி பிரதிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, அதுவும் வெறும் 76 நாட்களில். லினக்ஸிற்கு அடுத்து ஓபன் ஸோர்ஸின் மிக முக்கிய வெற்றி ஃபயர்ஃபாக்ஸ் என்றே கருதுகிறேன். மைக்ரோசாப்டை சற்றே கவலை கொள்ள வைப்பவைகளின் பட்டியலில் ஃபயர்ஃபாக்ஸ் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது.

February 16, 2005:

வெறும் 99 நாட்களில் 25 மில்லியன் (2.5 கோடி) என்ற இலக்கை ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி எட்டியிருக்கிறது.

Monday, January 24, 2005

அரசியலில் 'மட' அதிபதிகளா?

திண்ணையில் வெளியான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. http://www.thinnai.com/pl0113058.html. அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டேன், இப்படி எல்லாம் கூட மக்கள் சிந்திக்கிறார்களா என்ன! ஜெயேந்திரரை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறராம் இவர், யாரைய்யா இந்த வரதன்?. எப்பொழுது இது போன்ற 'அரிய' கருத்தை வெளியிட நேரம் கிடைக்கும் என்று காத்துக் கிடந்திருக்கிறார் போலும்.

சாதியாதிக்க வெறியும், மத வெறியும் கொண்ட ஒரு மடாதிபதி அரசியல் தலைவரா? இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களான சமத்துவமும் மதச்சார்பின்மையும் சுத்தமாக நீர்த்துப் போய் விட்டனவா? ஒரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஒரு கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் முன் கொண்டு போய் கோவிலில் சமர்ப்பித்து, வழக்கு கடவுளுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே நடப்பதாக கூறுகிறார். பின்னே இவரும், நீதிபதியும், அரசும் எதற்கு? இங்கே ஒருவர் அந்த குற்றம் சாட்டப்பட்டவரிடம் தலைமை பண்புக்கான இலக்கணங்களை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடுத்து அவரை நாடாள அழைக்கிறார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற மகாகவியின் பாடல் நினைவுக்கு வந்தாலும், இந்த மாந்தர்களின் நிலை அதை விடப் படு மோசமாக கெட்டிருப்பதால் வேறு வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்...

பிணந்தின்னிகள்

சுனாமி பேரழிவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிணந்தின்னிகளின் வரிசையில் இப்போது மதம் மாற்றும் கும்பலும் சேர்ந்து விட்டனர். ரீடிப் செய்தியின் சுட்டி http://www.rediff.com/news/2005/jan/24shoba.htm

ஏற்கனெவே தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை 90% கிறிஸ்தவர்களாக மாற்றியாகிவிட்டது. இப்பொழுது கடலூர், நாகை மாவட்டங்களில் சுனாமியால் துயரடைந்தவர்களின் குழம்பிய மனக்குட்டையில் மத மாற்ற மீன் பிடிக்க முயலுகிறது இந்த கும்பல்.

Sunday, January 09, 2005

சென்னை புத்தகக் கண்(கொள்ளாக்)காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் நேற்று. மூன்று ஆன்டுகளுக்கு முன்னர் நான் முதல் முறையாக சென்ற போது புழுதிப் படலத்தில் சிக்கி தலைவலியோடு வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த ஆண்டுகளில் கீழே கம்பளம் விரித்து காப்பாற்றினார்கள். ஆனாலும் சிறிய கடைகளுக்குள் புகுந்து நிதானமாகப் பார்த்து வாங்க முடியாத அளவு கூட்டமிருந்தது அல்லது கடைகள் சிறியதாக இருந்தது. இம்முறை பெரும் மாறுதல், அகலமான நடைபாதைகள், பெரிய ஒரே அளவிலான கடைகள், மிதமான கூட்டம் என்று. ஒரு சில கடைகளைத் தவிர மற்றவற்றில் நிதானமாகப் பார்த்து வாங்க முடிந்தது.

இம்முறையும் கை கொள்ளாத அளவு புத்தகங்கள் வாங்கினேன். இனிமேலும் எதையும் தூக்கிச் செல்ல முடியாது என்ற நிலையில் அரை மனதோடு வெளியெறினேன். நான் வாங்கிய புத்தகங்கள் இவையே.

ஜெயகாந்தன் - ஹர ஹர சங்கர
சுந்தர ராமசாமி - ஒரு புளியமரத்தின் கதை.
எஸ். ராமகிருஷ்ணன் - உப பாண்டவம்
ஜெயமோகன் - திசைகளின் நடுவே, சங்க சித்திரங்கள்
கல்கி - யார் இந்த மனிதர்கள்?, புஷ்பப் பல்லக்கு, அதிர்ஷ்ட கவசம்
தேவன் - ராஜத்தின் மனோரதம்
சுஜாதா - ஸீரங்கத்துக் கதைகள். (சென்ற முறை வாங்கியதை யாரோ சுட்டு விட்டார்கள்)
சின்னக் குத்தூசி - எத்தனை மனிதர்கள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி - அறிந்தனின்றும் விடுதலை
ஐதரேய உபநிஷதம், பஜகோவிந்தம், திருப்பாவை, பகவத்கீதை - ராமகிருஷ்ண மடம்
சுகி. சிவம் - மனசே! நீ ஒரு மந்திரச் சாவி
எங்கல்ஸ் - மார்க்ஸின் மூலதனம் பற்றி
லெனின் - ஒரு வரலாறு
லெனின் - புரட்சி பற்றி
பாரதியார் கதைகள் - வர்த்தமானன் பதிப்பகம்

நேரம் கிடைத்தால் திரும்பவும் செல்லலாம் என்றிருக்கிறேன், பார்ப்போம்.

Monday, January 03, 2005

கடல் கொண்ட கடலூர்

சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் நகர கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தேன். 6 நாட்கள் கழித்து சென்றதால் சுனாமியின் முழு சீற்றத்தை என்னால் உணர முடியவில்லை. நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் சமுதாயக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிகின்றன. நகரெங்கும் உதவிப் பொருட்கள் மற்றும் தன்னார்வலர்களை ஏற்றிக் கொண்டு வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் திரிந்து கொன்டிருக்கின்றன. மாநில, மத்திய அமைச்சர்கள் தம் படைகள் புடை சூழ சுற்றிச் சுற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கரையோர கிராமத்தில் கண்ட காட்சிகள் நெகிழ வைத்தன. ரிஷிகேஷில் இருந்து வந்திருக்கும் ஒரு தமிழ் தெரியாத சாமியாரின் தேறுதல் மொழிகள், அதை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் விளக்கும் ஒரு ஆர்வலர், இவர்களோடு வந்திருந்த நடிகர் விவேக் ஓபராய், சேதக் குப்பைகளை அப்புறப்படுத்தும் ராணுவ வீரர்கள், தன் திருமண வயது மகளை கடல் கொண்டு போன சோகத்தை யாரோ ஒரு தன்னார்வலர் குழுவிடம் விளக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாய், அதை பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தப்பிப் பிழைத்த பெண்கள், எங்கெங்கிருந்தோ வந்து தங்களால் முடிந்த சேவைகளை செய்து கொன்டிருக்கும் மக்கள், பல வகைப்பட்ட ஊடகங்களின் செய்தி சேகரிப்பாளர்கள், தன் நகைகளை நிச்சயமாக கடல் கொண்டு போயிருக்காது, யாரோ திருடிக் கொண்டு தான் போயிருக்க வேண்டும் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண், அதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் (அரசு அலுவலர்?), 'ஏ தமிழ்ச் செல்வி, நம்ம தெருவைப் பத்தி எதுனா சொல்லு, நமக்கு எதுனா கெடைக்குமில்லே' என்று ஒரு பெண்ணின் குரல், என்று கலவையான காட்சிகள்.

கண்ணில் பட்ட நல்லவை:

மக்களின் மனித நேயம்: எங்கெங்கிருந்தோ வந்து மலை போல குவிந்திருக்கும் உணவு, உடை மற்றும் பிற உதவிப் பொருட்கள். தமிழகத்திற்கு அடுத்து கர்நாடகத்தில் இருந்துதான் அதிக அளவு உதவி வந்திருக்கிறது. அரசியல் கலக்காத உண்மையான அன்பு அது.

மாவட்ட ஆட்சியரின் ஆளுமை: ககன் தீப் சிங் பேடி அரசுப் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் சிறப்பாக ஒருங்கிண்னைத்து நிவாரணப் பணிகளை மிகவும் விரைவுபடுத்தியுள்ளார்.

கண்ணில் பட்ட கெட்டவை:

சமூக விரோதிகள்: எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று சுனாமி சூறையாடிய வீடுகளை சமூக விரோதிகளும் சூறையாடியுள்ளனர்.மொழி தெரியாமல் வரும் தன்னார்வலர்களிடம் இதுதான் பாதிக்கப்பட்ட இடம் என்று எதையாவது காட்டி பொருட்களையும் சிலர் பறித்து விடுகின்றனர்.

வீணாகும் உதவிப் பொருட்கள்: மக்கள் பழைய துணிகளை வாங்க மறுத்து வீசி விடுகின்றனர். ஒரே மாதிரியான உணவை சாப்பிட மறுத்து வீணாக்குகின்றனர். புதிய துணி வேண்டுமாம், மீன் சோறு, பிரியாணி வேண்டுமாம், என்ன சொல்ல? இது கடலூரில் மட்டும் என்று நினைக்கிறேன். உண்மையாக நிறைய உதவி தேவைப்படும் நாகை பகுதி மக்களுக்கு இந்த பொருட்கள் போய் சேரவேண்டும்.