Monday, June 06, 2005

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகள் ரத்து - சரியா?

தமிழகத்தில் நுழைவுத்தேர்வுகளும் மாணவர்களும் படும்பாடு சொல்லி மாளாது. முதலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருந்தது, பின்னர் நுழைவுத் தேர்வுகளை நுழைத்து அதில் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் பள்ளி இறுதித்தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து கணக்கிட்டார்கள். இது கொஞ்ச காலம் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தது. பின்னர் சில பலம் படைத்த கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை 'வாங்கி'னார்கள். இங்கே ஆரம்பித்தது சனி; இகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்தை வாங்கிய கையோடு உச்ச நீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விடுதலையும் வாங்கி ஆளுக்கொரு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை பெரும் பாடு படுத்தி கொண்டிருந்தார்கள். இப்போது அரசு நடத்தும் நுழைவுத் தேர்வையும் நிறுத்தி மீண்டும் சுழியிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள்.

கல்வி போன்ற மிக அடிப்படையான விஷயங்களில் கூட இன்னும் ஒரு நிரந்தரமான கொள்கை இல்லை நம் அரசுகளுக்கு. எல்லாமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' தான். ஒரு மணி நேரத்துக்கு 10 விடைத்தாள் என்ற லட்சிய நோக்கொடு விடைத்தாள் திருத்துபவர்கள் நம் ஆசிரியப் பெருமக்கள். இந்தத் தேர்வு முடிவுகளை மட்டுமே நம்பி மாணவர் சேர்க்கை என்பது, மாணவர்களின் எதிர்காலக் கல்வியை சூதாட்டமாக்குவதாகவே அமையும். 'இதுதான் கொள்கை, இனி இப்படித்தான் இருக்கும்' என்று எந்த முடிவுமே இருக்காதா... இப்படிப்பட்ட ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் முன் யாரை கலந்தாலோசித்தது அரசு? மாணவர்களையா, ஆசிரியர்களையா, கல்லூரி நிர்வாகிகளையா, பெற்றொர்-ஆசிரியர் கழகங்களையா..? இன்னும் எத்தனை காலத்துக்கு சேர் தேய்ப்பதைத் தவிர வேறொன்றும் அறியாத சிந்தனாவாதி இ.ஆ.ப அலுவலர்களே இப்படி முடிவெடுத்துக் கொண்டிருப்பர்?

1 comments:

மு. சுந்தரமூர்த்தி said...

இதை நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு முன்னரே செய்திருக்கவேண்டும். நுழைவுத்தேர்வு ட்யூஷனுக்காக ஏகப்பட்ட பணம் செலவழித்த பெற்றோர், பொதுத்தேர்வு முடிந்தபின் நேரத்தை கொஞ்சம் மகிழ்ச்சியாக செலவழிக்க இயலாமல் மீண்டும் பாடங்களை உருப்போடவேண்டிய கட்டாயத்திலிருந்த மாணவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள்.

ஆண்டுக்கொரு வகையாக மாறிமாறி எடுக்கப்படும் இத்தகைய திடீர் முடிவுகள் அரசியல் மட்டத்தில் மட்டுமே எடுக்கப்படுகின்றனவா? அல்லது கல்வியாளர்களின் ஆலோசனைகளும் கேட்கப்படுகிறதா?