Thursday, March 31, 2005

யாராகவும் ... நீங்கள்

நம்மில் பலரும் சந்திக்கும் ஒரு ப்ரச்னை குப்பை மின்னஞ்சல்கள். பல இடங்களில் நம்முடைய மின்னஞ்சல் முகவரியை நாமெ கொடுத்து மாட்டிக் கொள்கிறோம். பெரும்பாலும,் இலவசமாக நாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதற்கு கொடுக்கும் விலை இது. மெய்லினேட்டர் (Mailinator) வழங்கி வரும் சேவை இதுபோன்ற தொல்லைகளைத தவிர்க்க உதவும். உன் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால்தான் ஆச்சு என்று அடம் பிடிக்கும் தளங்களுக்கு 'xyz@mailinator.com' என்று ஏதோ ஒரு முகவரியை கொடுக்கலாம். அந்த 'xyz' என்பதை 'bush', 'dog', 'down' என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். மெய்லினேட்டர் தளம், ...@mailinator.com் என்று வரும் எந்த ஒரு முகவரிக்கும் உடனடியாக ஒரு அஞ்சல் பெட்டியை உருவாக்கி வைத்து விடும்.
முகவரியைக் கேட்ட தளம் அதை சரி பார்க்கும்போது அந்த முகவரி இருக்கும், அந்த முகவரிக்கு அனுப்பப்படும் அஞ்சல்களும் அந்த அஞ்சல் பெட்டியில் ஒரு 3 மணி நேரம் வரை இருக்கும். ஒரு வேளை செயலி லைசென்ஸ்கள் அந்த முகவரிக்கு அனுப்பப்பட்டால் நீங்கள் அங்கெ போய் படித்துக் கொள்ளலாம். இந்த சேவையை நான் சில காலமாக பயன்படுத்தி குப்பைகளைக் குறைத்திருக்கிறேன். ஒரு எச்சரிக்கை, இங்கு உருவாகும் அஞ்சல் பெட்டிகளுக்கு 'கடவுச் சொல்' இல்லாததால் நீங்கல் எந்த அஞ்சல் பெட்டியை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

தலைப்புக்கும் இந்தப் பதிவுக்கும் என்னடா தொடர்பு என்று ஒரு வேளை நீங்கள் குழம்பினால், அது 'Be anyone' என்ற மெய்லினேட்டரின் தலைப்பு வாசகத்தின் மொழிபெயர்ப்பு முயற்சி. ஹி.. ஹி..

பி.கு:
மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் எழுத்துரு பிழை நீக்க கள்ள ஓட்டுப் போட விரும்பும் சகலமானவருக்கும்!

இந்த மெய்லினேட்டர் சேவையை பயன்படுத்தி நீங்கள் கணக்கற்ற கள்ள ஒட்டுக்களைப் போடலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

Wednesday, March 16, 2005

புது விசை

Thatstamil.com தளத்தில் இந்த புதிய பக்கத்தை பார்த்தேன்.



இது இணைய பதிப்பில் மட்டும் தான் வெளிவருகிறதா அல்லது அச்சு வடிவத்திலும் வருகிறதா என்று தெரியவில்லை. மற்றபடி, நல்லதொரு வாசிப்பனுபவம்!

Thursday, February 03, 2005

ஜோயல் ஆன் சாப்ட்வேர் (Joel on Software)

ஜோயல் ஸ்போல்ஸ்கி என்பவர் மென்பொருள் பொறியியல் பற்றி பல நல்ல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவருடைய இணைய தளம் Joelonsoftware.com.
இந்த கட்டுரைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை நீங்கள் உங்கள் மொழியில் மொழிபெயர்க்க விரும்பினாலும் அவரிடம் தெரிவிக்கலாம். நான் தமிழில் மொழி பெயர்க்க விருப்பம் தெரிவித்து சிலவற்றை மொழி பெயர்த்தேன், சிலவற்றைப் பிழை திருத்தம் செய்தேன். இதைச் செய்யும் போது தான் தமிழில் எவ்வளவு கலைச் சொற்கள் இன்னமும் தேவை என உணர்ந்தேன். ஆங்கிலத்தில் மிகச் சுலபமாக புதிய சொற்களை உருவாக்கி விடுகிறார்கள், அதற்கு சிறந்த உதாரணம் 'Googling'. ஆனால் தமிழில் அப்படி முடிவதில்லை.
இப்பொழுது அந்த தளத்தின் தமிழ் வடிவம் இயங்கி வருகிறது. நேரமின்மை மற்றும் வேலைப்பளுவால் என்னால் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடமுடியவில்லை. நேரமும் விருப்பமும் இருப்பவர்கள் இப்பணியில் ஈடுபடலாம்.

Wednesday, February 02, 2005

அன்றைய கணினி, இன்றைய கணினி!

40களின் 'ENIAC' திட்ட கணினியைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.


ENIAC - 1940s


இது, 50களில் பிரபலமான எம்.ஐ.டியின் 'Whirlwind I' கணினியின் நினைவகப் பகுதி.


MIT's Whirlwind I - 1950s


இது தற்போதைய 'Mac Mini'. இரு உள்ளங்கைகளில் அடங்கி விடுகிறது பாருங்கள்!
Mac Mini



நன்றி! : சிநெட் ந்யூஸ்

21 ஆண்டுகளாக மாறாத ஒரு ரசனை!

காமிக்ஸ் படிப்பதை பலரும் 'சின்னபிள்ளைத்தனமாகவே' கருதுகிறார்கள், ஆனால் என்னைப் பொருத்த வரை அது ஒரு தனி உலகம். இந்தப் புவியின் உள்ளேயே அதுவும் மறைந்திருக்கிறது, படிப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அது. அந்த உலகத்தில் நடக்கும் கதையை யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டு நான் பார்த்துக் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றும். நான் முதன் முதலில் படிக்கத் தொடங்கியது 'ராணி காமிக்ஸ்', 1982 முதல் தினத்தந்தி நிறுவனத்திலிருந்து வெளிவருகிறது இது. என் கைக்கு காமிக்ஸ் புத்தங்கள் சிக்கியது 1984ல் தான். அப்போது தொடங்கி இப்போது 2005 வரை 21 வருடங்களக எனக்கு ஆர்வம் குன்றாமல் இருக்கும் விஷயம் காமிக்ஸ் படிப்பது மட்டும்தான். ராணி காமிக்சில் தொடங்கி பின்னர் அது லயன் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் , திகில் காமிக்ஸ் , மினி லயன் என்று விரிவடைந்தது. ரானி காமிக்ஸ் தொடங்கிய புதிதில் அவர்கள் தரமான வெளிநாட்டு கதைகளையே வெளியிட்டார்கள். தரமான ஓவியங்கள், கலக்கலான மொழிபெயர்ப்பு என்று படிக்கவே குஷியாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல தரம் குறைய ஆரம்பித்தது, சுமாரான ஒவியங்கள், வசனங்களுடன் கதைகள் வர ஆரம்பித்து விட்டது. ராணி காமிக்சில் வந்த ஒரே 'சூப்பர் ஸ்டார்' ஜேம்ஸ் பாண்ட் மட்டும் தான். பின்னர் ராணி 'மாயாவி' கதைகளுக்கு மாறி, அந்த சரக்கும் தீர்ந்த பின்னர் சொந்தக் கதைகளை உருவாக்கத் தொடங்கியபோது நான் அதை படிப்பதையே நிறுத்தி விட்டேன்.

ஆனால் லயன் காமிக்ஸில் தொடர்ந்து நல்ல தரமான படைப்புகளையே வெளியிட்டு வருகிறர்கள். அமேரிக்க, ஐரோப்பிய கதைகளின் உரிமையை வாங்கி மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர். இவர்களின் தனித்துவமே இவர்களின் நகைச்சுவை கலந்த மொழிபெயர்ப்புதான். ஸ்பைடர் (ஸ்பைடர்மேன் அல்ல, இது வேறு ஸ்பைடர்), இரும்புக்கை மாயாவி, அ.கொ.தீ.க வை எதிர்த்துப் போராடும் சி.ஐ.டி லாரன்ஸ் & டேவிட், கௌபாய்களான டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் இணை, இரும்பு மனிதன் ஆர்ச்சி ரோபோ, லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் டைகர் என ஒரு பெரிய நாயகர்கள் பட்டியல் லயனில் உண்டு. இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸ்பைடரும், டெக்ஸ் வில்லரும் தான். ஸ்பைடரின் எகத்தாளம் நிறைந்த வசனங்கள் மிகவும் பாப்புலர். காமெடியில் கௌபாய் லக்கி லூக், சிக் பில் & கோ மற்றும் மதியில்லா மந்திரி ஆகியோர் பின்னியெடுப்பார்கள். சரியான வாசகர் ஆதரவு இல்லாதது, கதைப் பற்றாக்குறை மற்றும் பல காரணங்களால் லயன், முத்து தவிர மற்ற காமிக்ஸ்கள் நின்றுவிட்டன.

சிறு வயதில் இவற்றை என்னால் காசு கொடுத்து வாங்க முடியவில்லை, முழுக்க முழுக்க இரவலில் தான் படித்தேன். அப்பொழுது வாங்காமல் விட்டதை எல்லாம் இப்போது பழைய புத்தகக் கடைக்காரர்களின் கூட்டணியோடு வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறென். என்ன அப்போது 2 ரூபாய் தான் அசல் விலையே, இப்போது அதை 5 ரூபாய் கொடுத்து வாங்குகிறேன். இப்போது லயன் காமிக்ஸிலேயே பழைய கதைகளை 'க்ளாசிக்ஸ்' என் வெளியிட ஆரம்பித்துவிட்டதால் என் பாடு இன்னும் கொண்டாட்டம் தான்.


அப்போதிலிருந்து இப்போது வரை உள்ள ஒரு பிரச்னை இந்த லயன் காமிக்ஸ் வகையறாக்கள் சரியாகக் கடைகளில் கிடைக்காததுதான். அவர்களே தாமதமாக வெளியிடுவார்கள், அப்படியே வெளியிட்டாலும் கடைக்கு வந்து சேராது. போதிய வாசகர்கள் இல்லாததால் பல ஊர்களில் முகவர்களே கிடையாது. காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது எனத் தெரியாதவரை கண்ணில் படும் புத்தகக் கடையில் எல்லாம் 'இங்கே காமிக்ஸ் கிடைக்குமா?' என கேட்டிருக்கிறேன். ஒருமுறை ஒரு கடைக்காரர் என்னைப் பார்த்து திருப்பிக் கேட்டார், 'அப்டின்னா என்னா சார்?'. அன்றிலிருந்து கேட்கும் முன் கடையை ஒரு முறை நன்றாக நோட்டம் விட்டு, கடைக்காரரின் முகவிலாசங்களைப் படித்து துணிவு பெற்ற பின்னரே என் வினா பாயும். கடைசியில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் கடையை கண்டு பிடித்து ஜென்ம சாபல்யமடைந்தேன். அப்போதிலிருந்து ஒவ்வொரு வாரமும் அந்தப் பெட்டிக் கடைக்காரரைப் பார்த்து 'காமிக்ஸ் ஏதும் வந்திருக்கா?' என வினாவி அவர் 'இருக்கு சார்' என சொல்லிவிட்டால் நான் அடையும் பரவசத்திற்கு அளவிருக்காது. வாங்கும்போதே இவ்வளவு சந்தோஷமடைந்து விடுவதால், படிக்கும் போது அதை விட சந்தோஷம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. :) 7 வயதில் தொடங்கிய ஒரு விஷயம், அன்றைக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்ததோ அதே அளவு அல்லது அதை விட சற்றுக் கூடுதலான சந்தோஷத்தையே இன்றைக்கும் கொடுக்கிறது...

Monday, January 31, 2005

தினமலரும் உண்மையும்

சென்னை மாநகராப் பேருந்தில் நின்று கொண்டு வெளியே 'பராக்கு' பார்த்தபடி பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. அதில் இருந்த ஒரே வாசகம், 'தினமலர் - உண்மையின் உரைகல்'. நல்லதொரு 'oxymoron' வாசகத்தை கண்ட மகிழ்ச்சி எனக்கு. 'தினமலர் - உண்மைக்கு உறை போட்டு அதன் மேலே மூடி வைக்கும் கல்' என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..

ஜெயகாந்தன் -> (ஜெயேந்திரதாசன்)?

புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதலில் படித்தது ஜெயகாந்தனின் 'ஹர ஹர சங்கர'. மிகவும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், மனிதர் ஏமாற்றிவிட்டார். இவர் எப்போது சங்கர மடத்திற்கு பக்க வாத்தியமானார்? அதில் வரும் ஸ்வாமிகளுக்கு ஒன்றும் தெரியாதாம், அவர் ஹிந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுகிறாரம். பாவம் அவரை சுற்றி இருப்பவர்களின் சிறு தவறுகளுக்காக அவர் தண்டனை அனுபவிக்க நேருமாம். கடைசியில் சத்தியம் வெல்லுமாம். கஷ்டமடா சாமி! இதற்கிடையில் 'வன்னிய குல க்ஷத்ரியர்' என்ற ஜாதிப் பெயர் எப்படி உருவானது என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வேறு நிகழ்த்தி இருக்கிறார். ஜெயகாந்தன் ஒரு மாபெரும் எழுத்தாளராக இருக்கலாம், ஆனால் இந்த நாவலை அவரா எழுதினார் என்றே தோன்றுகிறது.

Tuesday, January 25, 2005

2 கோடி ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவிகள்

ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி 1.0 பதிப்பு இரண்டு கோடி பிரதிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது, அதுவும் வெறும் 76 நாட்களில். லினக்ஸிற்கு அடுத்து ஓபன் ஸோர்ஸின் மிக முக்கிய வெற்றி ஃபயர்ஃபாக்ஸ் என்றே கருதுகிறேன். மைக்ரோசாப்டை சற்றே கவலை கொள்ள வைப்பவைகளின் பட்டியலில் ஃபயர்ஃபாக்ஸ் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது.

February 16, 2005:

வெறும் 99 நாட்களில் 25 மில்லியன் (2.5 கோடி) என்ற இலக்கை ஃபயர்ஃபாக்ஸ் இணைய உலாவி எட்டியிருக்கிறது.

Monday, January 24, 2005

அரசியலில் 'மட' அதிபதிகளா?

திண்ணையில் வெளியான இந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. http://www.thinnai.com/pl0113058.html. அப்படியே அதிர்ந்து போய் நின்றுவிட்டேன், இப்படி எல்லாம் கூட மக்கள் சிந்திக்கிறார்களா என்ன! ஜெயேந்திரரை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறராம் இவர், யாரைய்யா இந்த வரதன்?. எப்பொழுது இது போன்ற 'அரிய' கருத்தை வெளியிட நேரம் கிடைக்கும் என்று காத்துக் கிடந்திருக்கிறார் போலும்.

சாதியாதிக்க வெறியும், மத வெறியும் கொண்ட ஒரு மடாதிபதி அரசியல் தலைவரா? இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்களான சமத்துவமும் மதச்சார்பின்மையும் சுத்தமாக நீர்த்துப் போய் விட்டனவா? ஒரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஒரு கொலை வழக்கின் குற்றப் பத்திரிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் முன் கொண்டு போய் கோவிலில் சமர்ப்பித்து, வழக்கு கடவுளுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே நடப்பதாக கூறுகிறார். பின்னே இவரும், நீதிபதியும், அரசும் எதற்கு? இங்கே ஒருவர் அந்த குற்றம் சாட்டப்பட்டவரிடம் தலைமை பண்புக்கான இலக்கணங்களை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடுத்து அவரை நாடாள அழைக்கிறார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே...' என்ற மகாகவியின் பாடல் நினைவுக்கு வந்தாலும், இந்த மாந்தர்களின் நிலை அதை விடப் படு மோசமாக கெட்டிருப்பதால் வேறு வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்...

பிணந்தின்னிகள்

சுனாமி பேரழிவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பிணந்தின்னிகளின் வரிசையில் இப்போது மதம் மாற்றும் கும்பலும் சேர்ந்து விட்டனர். ரீடிப் செய்தியின் சுட்டி http://www.rediff.com/news/2005/jan/24shoba.htm

ஏற்கனெவே தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை 90% கிறிஸ்தவர்களாக மாற்றியாகிவிட்டது. இப்பொழுது கடலூர், நாகை மாவட்டங்களில் சுனாமியால் துயரடைந்தவர்களின் குழம்பிய மனக்குட்டையில் மத மாற்ற மீன் பிடிக்க முயலுகிறது இந்த கும்பல்.

Sunday, January 09, 2005

சென்னை புத்தகக் கண்(கொள்ளாக்)காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் நேற்று. மூன்று ஆன்டுகளுக்கு முன்னர் நான் முதல் முறையாக சென்ற போது புழுதிப் படலத்தில் சிக்கி தலைவலியோடு வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த ஆண்டுகளில் கீழே கம்பளம் விரித்து காப்பாற்றினார்கள். ஆனாலும் சிறிய கடைகளுக்குள் புகுந்து நிதானமாகப் பார்த்து வாங்க முடியாத அளவு கூட்டமிருந்தது அல்லது கடைகள் சிறியதாக இருந்தது. இம்முறை பெரும் மாறுதல், அகலமான நடைபாதைகள், பெரிய ஒரே அளவிலான கடைகள், மிதமான கூட்டம் என்று. ஒரு சில கடைகளைத் தவிர மற்றவற்றில் நிதானமாகப் பார்த்து வாங்க முடிந்தது.

இம்முறையும் கை கொள்ளாத அளவு புத்தகங்கள் வாங்கினேன். இனிமேலும் எதையும் தூக்கிச் செல்ல முடியாது என்ற நிலையில் அரை மனதோடு வெளியெறினேன். நான் வாங்கிய புத்தகங்கள் இவையே.

ஜெயகாந்தன் - ஹர ஹர சங்கர
சுந்தர ராமசாமி - ஒரு புளியமரத்தின் கதை.
எஸ். ராமகிருஷ்ணன் - உப பாண்டவம்
ஜெயமோகன் - திசைகளின் நடுவே, சங்க சித்திரங்கள்
கல்கி - யார் இந்த மனிதர்கள்?, புஷ்பப் பல்லக்கு, அதிர்ஷ்ட கவசம்
தேவன் - ராஜத்தின் மனோரதம்
சுஜாதா - ஸீரங்கத்துக் கதைகள். (சென்ற முறை வாங்கியதை யாரோ சுட்டு விட்டார்கள்)
சின்னக் குத்தூசி - எத்தனை மனிதர்கள்
ஜே. கிருஷ்ணமூர்த்தி - அறிந்தனின்றும் விடுதலை
ஐதரேய உபநிஷதம், பஜகோவிந்தம், திருப்பாவை, பகவத்கீதை - ராமகிருஷ்ண மடம்
சுகி. சிவம் - மனசே! நீ ஒரு மந்திரச் சாவி
எங்கல்ஸ் - மார்க்ஸின் மூலதனம் பற்றி
லெனின் - ஒரு வரலாறு
லெனின் - புரட்சி பற்றி
பாரதியார் கதைகள் - வர்த்தமானன் பதிப்பகம்

நேரம் கிடைத்தால் திரும்பவும் செல்லலாம் என்றிருக்கிறேன், பார்ப்போம்.

Monday, January 03, 2005

கடல் கொண்ட கடலூர்

சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த கடலூர் நகர கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தேன். 6 நாட்கள் கழித்து சென்றதால் சுனாமியின் முழு சீற்றத்தை என்னால் உணர முடியவில்லை. நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் சமுதாயக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனனர். கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து உதவிகள் குவிகின்றன. நகரெங்கும் உதவிப் பொருட்கள் மற்றும் தன்னார்வலர்களை ஏற்றிக் கொண்டு வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்கள் திரிந்து கொன்டிருக்கின்றன. மாநில, மத்திய அமைச்சர்கள் தம் படைகள் புடை சூழ சுற்றிச் சுற்றி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கரையோர கிராமத்தில் கண்ட காட்சிகள் நெகிழ வைத்தன. ரிஷிகேஷில் இருந்து வந்திருக்கும் ஒரு தமிழ் தெரியாத சாமியாரின் தேறுதல் மொழிகள், அதை தமிழில் மொழிபெயர்த்து மக்களிடம் விளக்கும் ஒரு ஆர்வலர், இவர்களோடு வந்திருந்த நடிகர் விவேக் ஓபராய், சேதக் குப்பைகளை அப்புறப்படுத்தும் ராணுவ வீரர்கள், தன் திருமண வயது மகளை கடல் கொண்டு போன சோகத்தை யாரோ ஒரு தன்னார்வலர் குழுவிடம் விளக்கிக் கொண்டிருக்கும் ஒரு தாய், அதை பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டிருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தப்பிப் பிழைத்த பெண்கள், எங்கெங்கிருந்தோ வந்து தங்களால் முடிந்த சேவைகளை செய்து கொன்டிருக்கும் மக்கள், பல வகைப்பட்ட ஊடகங்களின் செய்தி சேகரிப்பாளர்கள், தன் நகைகளை நிச்சயமாக கடல் கொண்டு போயிருக்காது, யாரோ திருடிக் கொண்டு தான் போயிருக்க வேண்டும் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண், அதை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் (அரசு அலுவலர்?), 'ஏ தமிழ்ச் செல்வி, நம்ம தெருவைப் பத்தி எதுனா சொல்லு, நமக்கு எதுனா கெடைக்குமில்லே' என்று ஒரு பெண்ணின் குரல், என்று கலவையான காட்சிகள்.

கண்ணில் பட்ட நல்லவை:

மக்களின் மனித நேயம்: எங்கெங்கிருந்தோ வந்து மலை போல குவிந்திருக்கும் உணவு, உடை மற்றும் பிற உதவிப் பொருட்கள். தமிழகத்திற்கு அடுத்து கர்நாடகத்தில் இருந்துதான் அதிக அளவு உதவி வந்திருக்கிறது. அரசியல் கலக்காத உண்மையான அன்பு அது.

மாவட்ட ஆட்சியரின் ஆளுமை: ககன் தீப் சிங் பேடி அரசுப் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் சிறப்பாக ஒருங்கிண்னைத்து நிவாரணப் பணிகளை மிகவும் விரைவுபடுத்தியுள்ளார்.

கண்ணில் பட்ட கெட்டவை:

சமூக விரோதிகள்: எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்று சுனாமி சூறையாடிய வீடுகளை சமூக விரோதிகளும் சூறையாடியுள்ளனர்.மொழி தெரியாமல் வரும் தன்னார்வலர்களிடம் இதுதான் பாதிக்கப்பட்ட இடம் என்று எதையாவது காட்டி பொருட்களையும் சிலர் பறித்து விடுகின்றனர்.

வீணாகும் உதவிப் பொருட்கள்: மக்கள் பழைய துணிகளை வாங்க மறுத்து வீசி விடுகின்றனர். ஒரே மாதிரியான உணவை சாப்பிட மறுத்து வீணாக்குகின்றனர். புதிய துணி வேண்டுமாம், மீன் சோறு, பிரியாணி வேண்டுமாம், என்ன சொல்ல? இது கடலூரில் மட்டும் என்று நினைக்கிறேன். உண்மையாக நிறைய உதவி தேவைப்படும் நாகை பகுதி மக்களுக்கு இந்த பொருட்கள் போய் சேரவேண்டும்.

Tuesday, December 21, 2004

உண்மையான உண்மை

உண்மையான உண்மை என்பது உண்மையில் எப்போதுமே வெளிவராமலேயே போய் விடுகிறது. இரு நபர்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதாரண உரையாடலில் கூட, இது சாத்தியம். ஒரு உரையாடலின் போது ஒருவர் சொன்ன கருத்தை அவரே மற்றொரு உரையடலின் போது மீண்டும் மீண்டும் மறுத்துப் பேசினால், மற்றவர் அதை நம்பக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். நிலைமை இவ்வாறிருக்க பலர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் உண்மை வெளி வரும் வாய்ப்பு என்பது எவ்வளவு கடினம்? ஊடகங்கள் ஒரு புறம், அரசு ஒரு புறம், காவல் துறை ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்கள் ஒரு புறம், சாட்சிகள் ஒரு புறம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேண்டப்பட்டவர்கள் ஒரு புறம் என்று பல புறங்களில் இருந்து வெளியிடும் உண்மைகளில் எந்த உண்மை உண்மையான உண்மை?

உண்மையில் தலை சுற்றிக் கிறு கிறுவென கிறுகிறுத்துப் போகிறது....


Saturday, December 18, 2004

தமிழகத் தொழில் துறைக்கு நல்ல காலம்!

Yahoo!, HP, Oracle போன்ற, சென்னையை இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சென்னையில் கிளை பரப்ப இருக்கின்றன. 'சத்யம்' இந்தியாவிலேயே பெரிய கிளையை சென்னையில் தொடங்க இருக்கிறது. 'இன்போசிஸ்' சென்னையில் அதன் ஊழியர் எண்ணிக்கையை 25,000மாக விரிவுபடுத்துகிறது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப செயலர் விவேக் அரி நாராயணன் சொல்வது உண்மையானால் ஒவ்வொரு இரண்டாவது நாளும் சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனம் தொடங்கப்படுகின்றது.
கோயம்புத்தூரும் இத்துறையில் நன்றாக வளர்கிறது. TCS தனது கோயம்புத்தூர் கிளையை விரிவுபடுத்தப் போகும் வேளையில் விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அங்கு கால் பதிக்கப் போகின்றன. திருச்சியையும் அரசு விளம்பரப்படுத்துகிறது.

ஜவுளித் துறையில் உலகளாவிய 'கோட்டா' முறை முடிவடைவதால் திருப்பூரும், கரூரும் ஜவுளித்துறையில் மாபெரும் வளர்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது. இத்துறையின் வேலை வாய்ப்பு தகவல் தொழில்நுட்பத் துறையை விட இரு மடங்காக வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பிலும் சென்னை சக்கை போடு போடுகின்றது. இந்த வளர்ச்சி எல்லாம் தமிழகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு நன்றாக இருப்பதாலா அல்லது மற்ற மா நிலங்களில் நிலைமை இதை விட மோசமாக இருப்பதாலா?


Wednesday, December 15, 2004

இடம் மாறிய மடம்?

ஜெயேந்திரர் கைது நாடகம் ஆரம்பித்ததிலிருந்தே ஒரு விஷயம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவர் தம்பி ரகு மற்றும் சில 'மட' முக்கியஸ்தர்கள், வி.ஐ.பி பக்தர்களின் அந்தரங்கங்களைப் பற்றி ஓயாமல் 'உண்மை' விளம்பிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒரு அடிப்படையான விஷயத்தைப் பற்றி மட்டும் ஏனோ வாய் மூடி மௌனிக்கின்றன. அது காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு ஐயத்திற்கிடமானது என்ற விஷயம்.

1840-ற்கு முன்னால் 'காஞ்சி' சங்கர மடம் என்பதே கிடையாது. 1820-களில் சிருங்கேரி சங்கர மடத்தின் கிளை ஒன்று கும்பகோணத்தில் துவக்கப்பட்டது. பின்னர் அது 1840-களில் காஞ்சிபுரத்திற்கு இடம் மாறியது. 1840ற்கு முந்தைய காஞ்சி நகர நிலப் பதிவுகள் இன்றைக்கு மடம் இருக்கும் இடம் வேறொருவருக்கு உரிமையானது என்று சொல்லுகின்றன. ஆனால் காஞ்சி மடத்து ஆசாமிகள் இதை வன்மையாக மறுக்கின்றனர். ஆதி சங்கரர் அவருடைய இறுதி காலத்தில் காஞ்சியில் வாழ்ந்தார் என்றும் அவரே இந்த ஐந்தாவது மடத்தை நிறுவினார் என்பதும் அவர்களின் வாதம். ஆதி சங்கரர் கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்தார், இந்த மடம் 2500 ஆண்டு காலம் பழமையானது என்று ஓயாமல் சொல்லி உண்மை போல தோன்ற வைத்துள்ளனர். ஆனால் உன்மையில் ஆதி சங்கரர் இந்தியாவின் நான்கு திசைகலிலும் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார், வடக்கே பத்ரி நாத், கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா மற்றும் தெற்கே சிருங்கேரி. மேலும் அவர் வாழ்ந்த காலம் கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதி முதல் 9ம் நூற்றாண்டின் துவக்கம் வரை. 1940களில் இது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் இந்திய உச்ச நீதி மன்றமும் ஆதி சங்கரர் நிறுவியவை நான்கு மடங்களே என்று தீர்ப்பளித்துள்ளது. காஞ்சி மடத்தின் முதல் பீடாதிபதி 'சுரேஸ்வரர்' என்று மடம் கூறுகிறது, ஆனால் சிருங்கேரி மடமும் தங்கள் முதல் பீடாதிபதியாக சுரேஸ்வரரையே கூறுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இந்த மடத்தின் வரலாறு ஒரு மர்மமாகவே இருந்து வந்திருக்கிறது. முந்தைய பீடாதிபதியான 'பரமாச்சாரியார்' என்றழைக்கப்பட்ட சந்திரசேகரரின் கண்டுபிடிப்பில் உருவானதுதான் இந்த வரலாறு. காஞ்சி மடத்தின் பக்தர்களான ஊடக அதிபர்களின் அரிய தொண்டால் இது உண்மை போலவே ஆக்கப்பட்டு விட்டது. வட நாட்டு ஆங்கில செய்தியேடுகளும், வார இதழ்களும் சொல்லும் இந்த விஷயத்தைப் பற்றி ஏன் தமிழ் நாட்டு ஊடகங்கள் ஒன்று கூட பேசவில்லை? 'பகுத்தறிவு பகலவனின்' குடும்ப ஊடகங்கள் கூட இது பற்றி வாய் திறக்கவில்லையே ஏன்?

சந்திரசேகரர் ஏதொ தெய்வம் போல ஆக்கப்பட்டுவிட்டார். தி.மு.க தலைவர் கூட அவரின் மாண்பைப் பற்றியும் மடத்தின் பாரம்பரியத்தைப் பற்றியும் பேசுகிறார். தனது வரலாற்றை திரித்து சொல்லும் ஒரு மடத்திற்கு என்ன பாரம்பரியம், புடலங்காய்? தீண்டாமையை பிறப்புரிமை போல கருதிய, மகாத்மா காந்தியை சந்திக்க மறுத்த, விதவையான இந்திரா கந்தியிடம் திரைக்கு அப்பாலிருந்து பேசிய, தமிழை ' நீச' மொழி என்று காலை, முற்பகல் வேளைகளில் பேச மறுத்து சம்ஸ்க்ருதம் பேசிய, ஒரு சாதாரண மடாதிபதிக்கு என்ன மாண்பு இருக்கிறது, என்ன தெய்வீகம் இருக்கிறது? ஏன்னத்தை கண்டார் 'பகுத்தறிவு பகலவன்', ஓட்டை தவிர? எல்லாமே ஒன்றுதான், எல்லாம் பரமாத்மா என்ற அத்வைத தத்துவத்திற்கே எதிரானதல்லவா அவரின் இந்த பாகுபாடான செயல்கள்?

யாராவது ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின் பாரம்பரியத்தை கெடுத்துவிட்டார், இதற்கு முந்தைய பெரியவரின் தெய்வீக புகழை நாசமாக்கிவிட்டார் என்று சொன்னால் எனக்கு சிரிப்புதான் வருகிறது, உங்களுக்கு?

காஞ்சி மடத்தை பற்றிய உண்மைகளை என் போன்றோருக்கு தெரியச் செய்த ஜெயேந்திரருக்கு எனது நன்றிகள்!




பி. கு : இந்த விஷயங்களை ப்ற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள, ஜெயேந்திரர் கைது நாடகத்திற்குப் பின்னர் வெளி வந்த 'டைம்ஸ் ஆப் இன்டியா' 'தி வீக்', 'அவுட்லுக்', 'ப்ரண்ட் லைன்' ஏடுகளை பாருங்கள்.